வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.
10.1 ஓவர்களில் 100 ரன்களைக் குவித்ததன் மூலம், அதிவேகமாக 100 ரன்களைச் சேர்ந்த அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 12.2 ஓவர்களில் 100 ரன்களைக் குவித்ததே இந்திய அணியின் சாதனையாக இருந்தது.
தற்போது அதிவேகமாக ரன்களைக் குவிப்பதில் தனது முந்தைய சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது.
வங்கதேசத்துக்கு எதிராக அதிரடி
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1 – 0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனிடையே உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் செப். 27-ஆம் தேதி வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி 107 ரன்களை எடுத்திருந்தது. 2 வது மற்றும் 3 வது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற 4 வது நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
படிக்க | ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை: பாக். செல்லுமா இந்திய அணி?
இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. முதலில் களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே 3 ஓவர்கள் அடித்து அசத்தினார். இவர், 31 பந்துகளில் அரை சதம் அடித்து அதிரடி காட்டினார். அப்போது ரோஹித் சர்மா 11 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்தார். ஜெய்ஸ்வால் தொடர்ந்து அதிரடியாக ஆடியதால் 10.1 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை சேர்த்திருந்தது.
இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 ரன்களை கடந்த அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.