1000-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட எதிர்ப்பு! ஆம் ஆத்மி நூதன போராட்டம் மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்து ஆம் ஆத்மி நூதன போராட்டம் படம் | பிடிஐ
தெற்கு தில்லியில் சாத்பரி பகுதியில் சுமார் 1,100 மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி தில்லியில் ஆளுங்கட்சியான கட்சியினர் சனிக்கிழமை(ஜூலை 20) போராட்டம் நடத்தியுள்ளனர்.
தில்லியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள மரங்கள் வெட்டப்படுவதற்கு பாஜகவால் வழிநடத்தப்படும் துணைநிலை ஆளுநரே பொறுப்பு என ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது. ஆளுநர் உத்தரவுக்கிணங்கவே, தில்லி மேம்பாட்டு ஆணையத்தால் சாலை அகலப்படுத்தும் திட்டத்துக்காக மரங்கள் வெட்டப்படுவதாகவும் பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது ஆம் ஆத்மி.
இதையடுத்து டிடியு மார்க் பகுதியில் அமைந்துள்ள பாஜக அலுவலகம் அருகே திரண்ட ஆம் ஆத்மி கட்சியினர், துணைநிலை ஆளுநர் வி. கே. சாக்சேனாவின் படம் வரைந்த முகமூடிகளை அணிந்து கொண்டு, மரத்தை அரத்தால் அறுப்பது போல பாவனை செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறுபக்கம், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராயிடமிருந்து அனுமதி பெறப்பட்ட பின்னரே மரங்கள் வெட்டப்படுவதாக பாஜக தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.