12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் இன்று தொடக்கம்

இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் – பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐதராபாத்,

11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்குகிறது. நவம்பர் 9-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் அடுத்து உத்தபிரதேச மாநிலம் நொய்டாவிலும் (நவ.10-டிச.1), மராட்டிய மாநிலம் புனேயிலும் (டிச.3-24) அரங்கேறுகிறது. 'பிளே-ஆப்' சுற்று அட்டவணை விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் புனேரி பால்டன், 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ், 2 முறை சாம்பியனான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், முன்னாள் சாம்பியன்கள் யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ், தமிழ் தலைவாஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழையும். லீக்கில் 'டாப்-2' இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

தொடக்க நாளான இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. முதலாவது லீக் ஆட்டத்தில் பவன் ஷெராவத் தலைமையிலான தெலுங்கு டைட்டன்ஸ், பர்தீப் நர்வால் தலைமையிலான பெங்களூரு புல்சை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் நவீன் குமார் தலைமையிலான தபாங் டெல்லி, சுனில் குமார் தலைமையிலான யு மும்பாவை (இரவு 9 மணி) சந்திக்கிறது.

Related posts

தூத்துக்குடி: கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் பலி!

கிருஷ்ணகிரி அருகே தீ விபத்து: தீயணைப்புத் துறை அலுவலர், அவரது தந்தை பலத்த காயம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!