18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், டெல்டா உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாலத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டாமாவட்டங்கள், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர்,கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

4-ம் தேதி (நாளை) டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

5-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களிலும், 6-ம் தேதி சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், கடலூர், திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் உப்பாறு அணை, திருப்பூரில் 7 செ.மீ., ஆண்டிபட்டியில் 5 செ.மீ., மதுரை விமான நிலையம், திருப்பத்தூரில் 4 செ.மீ., கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, மதுரை மேலூரில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 28 டிகிரி முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.

மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள், அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

நவி மும்பையில் ரூ.25 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

தேசிய கொடி போர்த்தி பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட தொழில் அதிபர் ரத்தன் டாடா உடல்

இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மைக்கான வாய்ப்பை கிழக்காசிய உச்சி மாநாடு தரும்: பிரதமர் மோடி