3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

அமெரிக்காவில் க்வாட் உச்சிமாநாட்டில் கலந்துகொன்ட பின், நியூயார்க்கில் இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப்.22) உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, ”என்னுடைய 3-ஆவது முறை ஆட்சியில் மும்மடங்கு பொறுப்புணர்வுடன் முன்னோக்கி செல்கிறேன். கோடிக்கணக்கான இந்தியர்களின் எதிர்பார்ப்புகளே இப்போது இந்தியாவின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்கிறது.

அதிபர் ஜோ பைடன் தன்னுடைய வீட்டுக்கு என்னை அழைத்துள்ளார், அதிபர் ஜோ பைடனின் அன்பும் மரியாதையும் என்னை உருகச் செய்துள்ளது. இது 140 கோடி இந்தியர்களுக்குமான கௌரவம்.

இந்திய மக்கள் எங்கிருந்தாலும், அங்கு நம் பங்களிப்பை வழங்கி வருகிறோம். அமெரிக்காவில், நீங்கள்(இந்திய வம்சாவளியினர்) மருத்துவர்களாக, விஞ்ஞானிகளாக, பிற தொழில் பணியாளர்களாக உங்கள் பங்களிப்பை அளித்து வருகிறீர்கள்.

ஏஐ என்ற வார்த்தை, உலகைப் பொறுத்தவரையில் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ். ஆனால், ஏஐ என்பது அமெரிக்கா – இந்தியா என்ற உணர்வை பிரதிநிதித்துவப்படுத்துவதாக நம்புகிறேன்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இதுபோன்ற அரசு நிர்வாகத்தை பார்த்த மக்கள், எனக்காக வாக்களித்து மூன்றாவது முறையாக ஆட்சிப்பொறுப்பில் அமர்த்தியுள்ளனர். 60 ஆண்டுகளில் முதல்முறையாக இந்திய மக்கள் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பை வழங்கியுள்ளனர். மூன்றாவது முறை ஆட்சியில், சாதிக்க வேண்டிய லட்சியக் குறிக்கோள்கள் உள்ளன. அதற்காக மும்மடங்கு ஆற்றலுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

என்னுடைய வாழ்க்கையை நல்ல அரசு நிர்வாகத்துக்காகவும், செழிப்பான இந்தியாவை உருவாக்குவதற்காகவும் அர்ப்பணித்திருக்கிறேன். விதியால் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். முதல்வராகவோ அல்லது பிரதமராகவோ ஆவேன் என நினைத்துப் பார்த்ததேயில்லை” என்றார்.

பிரதமர் மோடியின் உரையை கேட்க நியூயார்க்கின் நாஸா வெடேரன் கொலீசியத்தில் 13,000-க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்கள் திரண்டிருந்தனர்.

Related posts

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!

அஜ்மீரில் இருதரப்பு மோதல்; ஒருவர் சுட்டுக்கொலை: ஜேசிபி வாகனத்துக்கு தீ வைப்பு!