ஒவ்வொரு ரயில் விபத்தின்போதும் ஆய்வுகள் மட்டுமே நடைபெறுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலம் மைசூருரிலிருந்து புறப்பட்டு தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு ரயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ரயிலின் 7 குளிர்சாதனப் பெட்டிகள் உள்பட 12 பெட்டிகள் தடம் புரண்டன, 2 பெட்டிகள் தீப்பற்றி எரிந்தன. விபத்தில் சிக்கிய ரயில் பயணிகள் 19 பேர் காயமுற்றனர். அதில் படுகாயமுற்ற 3 பேர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
இதையும் படிக்க | கவரப்பேட்டை ரயில் விபத்து: பழிசுமத்தும் விளையாட்டு ஆரம்பம்!
இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் தூக்கி வீசப்பட்டதில் உருக்குலைந்தன. தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி, தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகளில் 5 கிரேன்கள், 250 ரயில்வே பணியாளர்கள், 100 பேரிடர் மீட்புக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 350 பேர் சீரமைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
விபத்து நடந்த இடத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் மற்றும் கூடுதல் பொது மேலாளர், தெற்கு ரயில்வே மற்றும் முதன்மைத் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
இன்று காலை விபத்து நடந்த இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிக்க | கவரப்பேட்டை ரயில் விபத்தில் உயிரிழப்பில்லை: மாவட்ட ஆட்சியர் பேட்டி
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில்,
"ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே .
ஆய்வின் முடிவுகளைக் கொண்டு தீர்வுகளை உருவாக்குவது எப்போது?
உயிர்ச்சேதம் இல்லாத பெரும் நிம்மதி இருந்தாலும் , ஒவ்வொரு ரயில் பயணத்தையும் நிம்மதி இல்லாத பதட்டத்தை நோக்கி தள்ளும் சூழலில் இருந்து மீள ரயில்வே துறை என்னதான் செய்யப்போகிறது?" என்று பதிவிட்டு தெற்கு ரயில்வே-க்கும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைணவுக்கும் கேள்வி எழுப்பியுள்ளார்.