6 மாத குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்துகொன்று தாய் தற்கொலை

உடல்நிலை சரியில்லாமல் குழந்தை வேதாஸ்ரீ அழுது கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள வலையப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 38). இவர் நிலங்களுக்கு கம்பி வேலி அமைக்கும் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அழகு மீனா (34). இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. வேதாஸ்ரீ என்ற 6 மாத பெண் குழந்தை இருந்தது.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் குழந்தை வேதாஸ்ரீ அழுது கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. டாக்டர்களிடம் காண்பித்தும் பலன் இல்லை என தெரிகிறது. தொடர்ந்து குழந்தை அழுது கொண்டே இருந்ததால் அழகுமீனா கவலையுடன் காணப்பட்டாராம்.

இதையடுத்து நேற்று அதிகாலை 3 மணியளவில் அழகுமீனா, தனது 6 மாத குழந்தையுடன் வீட்டின் அருகில் உள்ள கண்மாய் பகுதிக்கு சென்றார். அப்போது அவர் பெட்ரோலை எடுத்து சென்றார். பின்னர் அழகுமீனா தன் மீதும், குழந்தை மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். தீ உடல் முழுவதும் பரவி குழந்தையும், அவரும் வலியால் அலறினர்.

இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி சென்று இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை வேதாஸ்ரீ பரிதாபமாக இறந்தது. அழகு மீனா மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து சிவகங்கை ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்துகிறார். இந்த சம்பவம் திருப்புவனம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

சுழற்பந்து சவாலை சமாளிக்குமா இந்தியா?- வங்கதேசத்துடனான முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

குழந்தை சாப்பிட அடம் பிடிக்கிறதா? என்ன செய்யலாம்?

முன்னாள் அமைச்சர் சுந்தரம் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி