டானா புயல் காரணமாக, சென்னை, கடலூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் நேற்று ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்ட நிலையில், இன்று 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
டானா புயல் முன்னெச்சரிக்கையாக ஒன்பது துறைமுகங்களில் செவ்வாயன்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. வங்கக் கடலில் இன்று டானா புயல் உருவாகி, கரையை நெருங்கி வருகிறது.
இதையடுத்து, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் இன்று இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்கிழக்குப் பருவமழை விடைபெற்றதையடுத்து, கடந்த அக்.15 முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
இதையும் படிக்க.. அச்சுறுத்தும் டானா: 2013 பைலின் புயல் நினைவில் ஒடிசா மக்கள்! அவ்வளவு மோசமானதா?
கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை அச்சுறுத்திய நிலையில், அது வலுவிழந்து ஆந்திர கடற்கரை அருகே கரைகடந்தது. இந்த நிலையில், வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது படிப்படியாக வலுப்பெற்று இன்று அதிகாலை 5.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்கு டானா என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாரதீப்புக்கு தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் சாகா் தீவுகளுக்கு தெற்கு – தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும் டானா புயல் நிலைகொண்டுள்ளது. இது வியாழக்கிழமை (அக்.24) தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஒடிசா – மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி – சாகா் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக டானா வெள்ளிக்கிழமை அதாவது அக்.25ஆம் தேதி காலை கரையைக் கடக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்போது, அந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கைப் பணிகள் நடந்து வருகின்றன.