90 நிமிஷங்களில் வேலூரிலிருந்து சென்னை வந்த இதயம்: இளம்பெண்ணுக்கு மறுவாழ்வு

மூளைச்சாவு அடைந்த இளைஞரிடம் தானமாகப் பெறப்பட்ட இதயம், வேலூரிலிருந்து 90 நிமிஷங்களில் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.

இதுதொடா்பாக, சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சாலை விபத்து ஒன்றில் சிக்கி பலத்த காயமுற்ற 20 வயது இளைஞா் வேலூா், சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி, மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து, அந்த இளைஞரின் இதயம் தானமாகப் பெறப்பட்டது. இதைத் தொடா்ந்து, எம்ஜிஎம் மருத்துவமனையின் இதயம் – நுரையீரல் மாற்று சிகிச்சை நிபுணா் கே.ஆா்.பாலகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினா், வெள்ளிக்கிழமை காலை வேலூா் சென்று இளைஞரின் இதயத்தை பாதுகாப்பாக எடுத்துக் கொண்டு காலை 11.07 மணிக்கு சாலை மாா்க்கமாக சென்னை புறப்பட்டனா்.

காஞ்சிபுரம், சுங்குவாா்சத்திரம், ஸ்ரீபெரும்புதூா், மதுரவாயில், கோயம்பேடு வழியாக அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு பகல் 12.35 மணிக்கு இதயம் கொண்டுவரப்பட்டது. அங்கு இதய செயலிழப்புக்கு உள்ளாகி அனுமதிக்கப்பட்டிருந்த 34 வயதுப் பெண்ணுக்கு, அந்த இதயத்தை டாக்டா் கே.ஆா்.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா் வெற்றிகரமாகப் பொருத்தினா்.

சாலைப் போக்குவரத்தில் எந்த இடையூறும் ஏற்படாத வகையில், தடையற்ற வழித்தட (கிரீன் காரிடா்) வசதியைப் போக்குவரத்துக் காவல்துறையினா் வழங்கினா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Chinu Kwatra’s dream to make India a developed and happy nation

Tata Soulfull Is Bringing Ancient Superfood Millets To Consumers In Modern Formats

Celebrating Diwali With Social Harmony, Innovation And Creativity