ஸ்ரீநகர்: தேசிய மாநாட்டுக் கட்சியின் சட்டப் பேரவைக் குழுத் தலைவராக ஒமர் அப்துல்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.
தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் தங்கள் தலைவரைத் தேர்வு செய்வதற்காக ஸ்ரீநகரில் உள்ள அக்கட்சியின் தலைமையகமான நவா-இ-சுபாவில் கூடினர். இக்கூட்டத்தில் ஒமர் அப்துல்லா அக்கட்சியின் சட்டப் பேரவைத் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதாக கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.
ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக தேசிய மாநாட்டுக் கட்சியின் தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒமர் அப்துல்லா நன்றி: தேசிய மாநாட்டுக் கட்சி சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தன்னை தேர்வு செய்ததற்காக கட்சி எம்எல்ஏ-க்களுக்கு ஒமர் அப்துல்லா நன்றி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
கட்சியின் சட்டப் பேரவைக் குழு தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்ததற்காகவும் அரசமைப்பதற்கு உரிமை கோர வாய்ப்பு அளித்ததற்காகவும் கட்சி எம்எல்ஏக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சுயேச்சைகளில் நான்கு பேர் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் கட்சியின் பலம் 46-ஆக உயர்ந்துள்ளது.
கூட்டணிக் கட்சியான காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு முடிவெடுக்க ஒரு நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆதரவுக் கடிதத்தை வழங்கியதும் நான் அரசு அமைப்பதற்கு ஆளுநரிடம் உரிமை கோருவேன் என்றார்.
அண்மையில் நடந்து முடிந்த ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தலில் 42 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக தேசிய மாநாட்டுக் கட்சி உருவெடுத்துள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை முறையே ஆறு, ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளதால் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது.